பேரீச்சம்பழ சட்னி





தேவையான பொருட்கள்:
பேரீச்சம்பழம் - 250 கிராம்
செத்தல் மிளகாய் (காய்ந்தமிளகாய்) - 10 அல்லது 15
இஞ்சி - 2" நீளமான ஒரு துண்டு
உள்ளி (பூண்டு) - 4 பல்
வினிகர் - 1 டம்ளர்
சீனி (சர்க்கரை) - 2 மேசைக்கரண்டி
முந்திரிப்பருப்பு (சிறிதாக வெட்டியது) - 50 கிராம்
உப்பு - தேவையானளவு
செய்முறை:
பேரீச்சம்பழத்தை விதை நீக்கி துப்பிரவாக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி கிரைண்டரில் (மிக்ஸியில்) போட்டு அரைப்பதமாக அரைத்தெடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
பின்பு செத்தல் மிளகாய்(காய்ந்தமிளகாய்), இஞ்சி, உள்ளி(பூண்டு)ஆகியவற்றை 2 மேசைக்கரண்டி வினிகர் விட்டு நன்றாக அரைத்தெடுக்க வேண்டும்.
அதன் பின்பு அரைத்து வைத்துள்ள பேரீச்சம்பழம், அரைத்து வைத்துள்ள கலவை, சீனி (சர்க்கரை), உப்பு, மிகுதியான வினிகர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதன் பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை) வைத்து அது சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள கலவையை போட்டு காய்ச்சவும்.
இக்கலவை ஓரளவு தடிக்க தொடங்கும் போது கஜுவை (முந்திரிப்பருப்பு) சேர்த்து கிளறவும்.
இக்கலவை நன்றாக தடித்ததும் இக்கலவையுள்ள பாத்திரத்தினை அடுப்பிலிருந்து இறக்கவும். அதன் பின்பு இக்கலவையை வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக ஆறவிடவும்.
நன்றாக ஆறிய பின்பு இக்கலவையை தொற்று நீக்கிய ஜாம் போத்தலில் ஊற்றி அதை காற்று உட்போகாதவாறு நன்றாக மூடி வைக்கவும்.
குறிப்புகள்:
சட்னியை பற்றீஸ், ரோல்ஸ் கட்லெட், இடியப்பம், தோசை, இட்லி, சமோசா ஆகியவற்றுடன் பரிமாறலாம்.