காரசேவு (3)

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1/2 கிலோ

அரிசி மாவு - 1/4 கிலோ

மிளகு - 15 கிராம்

சீரகம் - 15 கிராம்

லெமன் கலர் - ஒரு சிட்டிகை

பெருங்காயத் தண்ணீர் - 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - 4 கொத்து

எண்ணெய் - 1/4 கப்

உப்பு - 2 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் கொட்டவும். மாவின் மத்தியில் குழி போல் செய்து கொண்டு அதில் லெமன் கலர், உப்பு ஆகியவற்றைப் போடவும்.

பின்னர் ஒன்றிரண்டாக அரைத்த மிளகுத்தூள், முழு சீரகம் ஆகியவற்றைப் போடவும். சிறிய காரசேவு என்றால் மிளகு, சீரகம் சேர்ப்பதில்லை. மிளகாய்த்தூளும், ஓமமும் சேர்க்க வேண்டும்.

பெருங்காயத் தண்ணீரை மாவில் ஊற்றவும். அதில் எண்ணெய்யையும் ஊற்றவும்.

அரை கப் அளவு தண்ணீர் விட்டு மாவினை ஒன்று சேர பிசையவும்.

பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு, கட்டி விழாமல் மாவை பதமாக பிசையவும்.

பிசைந்த மாவு நீர்க்க இளகி இருக்கக் கூடாது. சற்று கெட்டியாக முறுக்கு மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, கொதித்ததும் காரசேவு பலகையை வாணலிக்கு நேராகப் பிடித்து அதில் மாவை வைத்து தேய்க்கவும். கடைகளில் பெரியதாக பலகை போன்ற அச்சை பயன்படுத்துவார்கள். வீடுகளில் நாம் சாரணியின் மீது மாவை தேய்த்து காரசேவு செய்யலாம். முறுக்கு அச்சுப் போன்ற அச்சு கொண்டும் பிழியலாம்.

காரசேவு நன்றாக வேகும் வரை, அவ்வபோது சாரணி கொண்டு அரித்து, திருப்பி விட்டு வேகவிடவும்.

நன்றாக வெந்து, நிறம் மாறி வரும் நேரம், கறிவேப்பிலை இலைகளை எண்ணெய்யில் போடவும். மேலும் சிறிது நேரம் வேகவிட்டு, ஒரு சேவை எடுத்து உடைத்துப் பார்த்து வெந்ததை உறுதி செய்து கொண்டு, பின்னர் அரித்து எடுத்து எண்ணெய் வடியவிடவும்.

குறிப்புகள்:

இந்த காரச் சேவிற்கு சற்று பெரிய துளைகளை உடைய சாரணி அல்லது அச்சினை பயன்படுத்தவும்.