வெஜி ரோல்ஸ் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மேல்மாவிற்கு:

மைதா மாவு - 11/2கப்

உப்பு - தேவையான அளவு

ஈஸ்ட் - 1/2 தேக்கரண்டி

இளம் சூடான தண்ணீர் - 1/4 கப்

சீனி - 1 தேக்கரண்டி

பூரணத்திற்கு:

உருளைக்கிழங்கு - 2

தக்காளி - 1

கரட் - 1

கோஸ், லீக்ஸ் கலவை - 1 கப்

வெங்காயம் - பாதி

உள்ளி - 4 பற்கள்

கடுகு, பெரிய சீரகம், கறுவா(பட்டை), கராம்பு, ஏலம் - சிறிது

மிளகாய் தூள் - 1 மேசைகரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிது

தண்ணீர் - 2 கப்

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

பொரிப்பதற்கு:

எண்ணெய் - 1/2 லீட்டர்

செய்முறை:

மேல்மாவு செய்முறை:

இளம் சூடான தண்ணீரினுள் சீனிய கரைத்து அதனுள் ஈஸ்ட்டை போட்டு 10 நிமிடங்கள் வைக்கவும்.

மைதா மாவினை அரித்தெடுத்து(சலித்து) உப்புடன் கலந்து வைக்கவும்.

பின்னர் நொதித்த ஈஸ்ட் கலவையை மாவினுள் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல பிசையவும். தேவைப்படின் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.

பின்னர் பிசைந்த மாவினை உருட்டி மூடி 2 மணித்தியாலங்கள் வைக்கவும்.

பூரணம் செய்வதற்கு:

தக்காளி, உருளைக்கிழங்கினை சிறு சதுர துண்டுகளாக வெட்டவும்.

கரட்டை மெல்லிய சிறு துண்டுகளாக வெட்டவும் அல்லது துருவி வைக்கவும்.

கோஸ், லீக்ஸ் இரண்டையும் மெலிதாக அரிந்து வைக்கவும்.

வெங்காயம், உள்ளியை பொடியாக வெட்டி வைக்கவும்.

கறுவா(பட்டை), கராம்பு, ஏலத்தை வெறும் சட்டியில் வறுத்து பொடித்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, பெரிய சீரகம், வெட்டிய உருளைக்கிழங்கு, வெங்காயம், உள்ளி என்பவற்றைப் போட்டு 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.

பின்னர் அதனுள் வெட்டிய கோஸ், லீக்ஸ், கரட்டை சேர்த்து கிளறி மூடி 5 நிமிடங்களுக்கு அவிய விடவும்.

பின்னர் வெட்டிய தக்காளி, மிளகாய் தூள்,மஞ்சள் தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் விட்டு கலந்து மூடி வேக விடவும்.

தண்ணீர் ஓரளவு வற்றியதும் பொடித்து வைத்த ஏல கலவையை சேர்த்து கிளறவும்.

தண்ணீர் நன்கு வற்றி கறி சுருண்டு வந்ததும் இறக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும்.

பின்னர் குழைத்து வைத்த மாவினை எடுத்து திரும்பவும் நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

பின்னர் ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்தி போல தட்டி அதன் ஒரு பக்கத்தில் ஒன்று அல்லது ஒன்றரை மேசைக்கரண்டி கறியை நீளவாக்கில் வைக்கவும்.

பின்னர் இரு பக்க கரையிலும் உள்ள மாவினை கறியின் மேலே வருமாறு மூடவும். (இப்போது செவ்வக வடிவில் இருக்கும்)

பின்னர் மாவினை கறியுடன் சேர்த்து இழுத்து உருட்டவும். (இது உருளை வடிவில் இருக்கும்)

ஒரு பிரஷால் சிறிது தண்ணீரை இதன் மேலே பூசி றஸ்க் தூளில்(Bread crumps) போட்டு பிரட்டி ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் 1/2 லீட்டர் எண்ணெயை விட்டு, அது நன்கு கொதித்ததும் அதனுள் இந்த ரோல்சினை ஒன்று அல்லது இரண்டாக போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.

சுவையான வெஜி-ரோல்ஸ் தயார். இதனை தக்காளி சோஸ்/கெட்ச்-அப்புடன் பரிமாறலாம்.

குறிப்புகள்:

மாவினை பிசைந்து உருட்டி மூடி 2 மணித்தியாலங்கள் வைத்திருந்து எடுக்கும் போது அது நன்கு ஊதியிருக்கும் (ஈஸ்ட் சேர்த்திருப்பதால்) எனவே அதனை திரும்பவும் பிசைதல் அவசியம். கறியை தண்ணீர் வற்றும் வரை விடும் போது அடிப்பிடிக்காது கிளறிக் கொண்டே இருக்கவும்.