கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 2 (3/4 lb or 350g - 400g)

வெட்டிய வெங்காயம் - 4 மேசைக்கரண்டி

வெட்டிய உள்ளி - 4 மேசைக்கரண்டி

புளி - சிறிய நெல்லிக்காயளவு

தேங்காய்ப்பூ - 1/4 கப்

உப்பு

பெரிய சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிப்பதற்கு

மிளகாய்த்தூள்(கறித்தூள்) - 1- 11/2 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - 1 நெட்டு

செய்முறை:

கத்தரிக்காயை விரல் தடிப்பில் 1 1/2" - 2" துண்டுகளாக வெட்டவும்.

புளியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

தேங்காய்ப்பூவினுள் 1/4 கப் தண்ணீர் விட்டு பிழிந்து பாலை தனியாக எடுத்து வைக்கவும்(முதற்பால்).

மீண்டும் அதே பிழிந்த தேங்காய்ப்பூவினுள் 1/2 கப் தண்ணீர் விட்டு பிழிந்து பால் எடுக்கவும். (இரண்டாம் பால்)

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கத்தரிக்காய் துண்டுகளை சிவக்க பொரித்து(deep fry) எடுக்கவும்.

வேறொரு பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு அதனுள் வெங்காயம், உள்ளி, கடுகு, பெரிய சீரகம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் வெந்தயம், பொரித்த கத்தரிக்காய் துண்டுகளைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.

பின்னர் புளிக்கரைசல், இரண்டாம் தேங்காய்ப்பால், (மிளகாய்)கறித்தூள், உப்பு போட்டு மூடி கொதிக்க விடவும்.

குழம்பு நன்கு கொதித்ததும் தேங்காய் முதற்பாலை விட்டு கலக்கி மீண்டும் கொதிக்க விடவும்.

குழம்பு ஓரளவு தடிப்பானதும் (எண்ணெய் பிறக்கும்) இறக்கவும்.

சுவையான கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு தயார். இதனை சோறு, இடியப்பம், புட்டு என அனைத்து உணவுகளுடனும் பக்க உணவாக சாப்பிடலாம்.

குறிப்புகள்:

கத்தரிக்காய் அதிகமாக பொரிந்துவிட்டால் கசப்பாக இருக்கும். எனவே அளவாக சிவக்க பொரித்தால் போதும். வெளிநாட்டில் உள்ளவர்கள் அதுவும் குளிர் நாடுகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் தேங்காய்ப்பால் பாவிப்பதில்லை. என்வே தேங்காய்ப்பாலிற்கு பதிலாக வெறும் தண்ணீரிலேயே குழம்பு வைக்கலாம். நன்றாக இருக்கும்.