இலங்கை கடலை வடை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - ஒரு சுண்டு

பெருஞ்சீரகம்(fennel) - (1- 2) மேசைக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

பெரிய வெங்காயம் (சிறியதுண்டுகளாக நறுக்கியது) - ஒன்று

பச்சைமிளகாய் (சிறியதுண்டுகளாக நறுக்கியது) - 4

கறிவேப்பிலை (நறுக்கியது) - சிறிதளவு

உள்ளி(பூண்டு) (நசுக்கியது) - 2 பல்

இஞ்சி(நசுக்கியது) - சிறியதுண்டு

எண்ணெய் - தேவையான அளவு

கொதிதண்ணீர் (நகச்சூடு) - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பை போட்டு அதன் மேல் ஒரளவு கொதித்த நீரை (நகச்சூடு)விடவும் (கடலைப் பருப்பை விட தண்ணீர் கூடுதலாக இருக்கவேண்டும்).

பின்பு அதை( 1 - 2)மணி நேரம் ஊறவிடவும். கடலைப்பருப்பு ஊறியபின்பு கடலைப்பருப்பில் உள்ள தண்ணீரை வடித்து விடவும்.

தண்ணீர் வடித்து விட்ட பின்புகடலைப்பருப்பை எடுத்து மூன்றாக பிரித்து மூன்று பாத்திரத்தில் போடவும்(முதலாவது பாத்திரத்தில் கொஞ்சமாகவும், இரண்டாவது மூன்றாவது ஆகிய பாத்திரங்களில் முதலாவதின் இரண்டு மடங்காகவும்).

இரண்டாவது பாத்திரத்தில் உள்ள கடலைப்பருப்பை எடுத்து அதனை கிரைண்டரில் (மிக்ஸியில்) அல்லது ஆட்டுகல்லில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும் (நன்றாக அரைக்ககூடாது)(அதிகளவு தண்ணீர் சேர்க்ககூடாது).

அரைத்த கடலைப்பருப்பை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும். அதன் பின்பு மூன்றாவது பாத்திரத்தில் உள்ள கடலைப் பருப்பை எடுத்து அதனை கிரைண்டரில்(மிக்ஸியில்) அல்லது ஆட்டுகல்லில் போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்)(தடிப்பான பசை போல).

பின்பு அதனுடன் உப்பைசேர்த்து அரைக்கவும் சேர்த்து அரைக்காவிட்டால் உப்பு நன்றாக கலக்காது).

அதன் பின்பு மூன்றாவதாக அரைத்த பருப்பை ஒரு பாத்திரத்தில் போடவும். பின்பு மூன்றாவதாக அரைத்த கடலைப்பருப்பு உள்ள பாத்திரத்தில் அதனுடன் இரண்டாவதாக அரைத்த கடலை பருப்பை போட்டு நன்றாக கலக்கவும்.

கலந்த பின்பு அதனுடன் முதலாவதாக எடுத்து வைத்திருக்கும் கடலைப்பருப்பை போட்டு நன்றாக கலக்கவும்.

இவையாவற்றையும் நன்றாக கலந்தபின்பு இதனுடன் சிறியசிறிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, (நசுக்கிய)உள்ளி(பூண்டு),(நசுக்கிய)இஞ்சி, பெருஞ்சீரகம்(fennel), கடுகு ஆகியவற்றை போட்டு கலக்கவும்.

கலந்தபின்பு அடுப்பில்தாட்சியை(வாணலியை)வைத்து அதில் அரைவாசிக்கு எண்ணெய்விட்டு நன்றாக கொதிக்கவிடவும்.

அரைத்து கலந்து வைத்திருக்கும் மாவை கொஞ்சம் கையில் எடுத்து அதை ஓரளவு உருண்டையாக்கி அதை கையின் நடுப்பகுதியில் வைத்து ஓரளவு தட்டவும்.

கொதித்த எண்ணெயில் செய்த வடையை போடவும் இதே போல் கொஞ்ச வடைகளை செய்து போட்டு ஓரளவு மஞ்சள் நிறமாக பொரிக்கவும்.

பொரிந்த வடைகளில் உள்ள எண்ணெயை வடித்து விட்டு அதை சூட்டுடன் ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது நேரம் மூடிவைக்கவும்(வடையின் உட்பகுதி நன்றாக அவிவதற்காக அப்படி செய்யாவிட்டால் வடையின் உட்பகுதி நன்றாக அவியாது).

அதன் பின்பு அதை எடுத்து திரும்பவும் கொதித்த எண்ணெயில் போட்டு நல்ல பொன்னிறமாக பொரிக்கவும்.

அதன் பின்பு வடைகளில் உள்ள எண்ணெயை வடித்துவிட்டு அதை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

அதன் பின்பு சத்தான சுவையான இலங்கை கடலை வடை தயாராகிவிடும்.

பின்பு அதை எடுத்து ஒருசிறிய தட்டில் வைத்து சட்னியுடன் அல்லது துவையலுடன் பரிமாறவும்.

குறிப்புகள்:

கடலைப்பருப்பில் கார்போஹைட்ரேட், சீனி(சர்க்கரை)நார்சத்துக்கள், கொழுப்பு, புரதம், நீர், வைட்டமின் A,B1,B2, B3,B5,B6,B9,B12,C,E,K, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் போன்ற பல சத்துக்கள் காணப்படுகிறது. இப்படிப்பட்ட கடலைப் பருப்புடன் மினரல் சத்தும், சுவையும் சேர்ந்து காணப்படுவதே இலங்கை கடலை வடை இதனை இலங்கை மசால வடை என்றும் அழைப்பார்கள் இதனை செய்து சாப்பிட்டு இதன் சுவையை அறியவும். எச்சரிக்கை - கடலைப்பருப்பு அலர்ஜி உடையவர்கள், இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். மாற்று முறை - கபேஜ்(கோவா)சேர்த்தும் செய்யலாம், உள்ளி, இஞ்சி போடாமலும் செய்யலாம் விரும்பினால் சீரகம் (சின்னசீரகம்) அரைகால் தேக்கரண்டி சேர்க்கலாம். வடைக்கு அரைத்து டீபிரீசரில் வைத்துவிட்டு தேவையானநேரத்தில் அதை எடுத்து செய்யலாம் அல்லது வடையை செய்து விட்டு டீபிரீசரில் வைத்து தேவையான நேரத்தில் எடுத்து மைக்ரோ அவனில் வைத்து சூடாக்கி உண்ணலாம் . கவனிக்க வேண்டிய விசயங்கள் - வடை நன்றாக அவிந்ததா என்பதை கவனிக்கவும், வெங்காயம் சேர்த்தவுடன் வடையை பொரிக்கவும்(கனநேரம் வைத்திருக்ககூடாது வைத்திருந்தால் வெங்காயத்தினுள் உள்ள நீர்வெளியேறி வடையை பழுதாக்கிவிடும் வடைமாவை கலக்கும் போது 3வது, 2வது, 1வது என்ற முறைப்படி கலக்கவும்(எல்லாம் நன்றாக கலப்பதற்காக), உப்பு நன்றாக சேர்ந்து விட்டதா என கவனிக்கவும்.