அரியதரம் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெள்ளை பச்சரிசி - 4 கப்

கம்பிக்குருணல் - ஒரு கப்

சீனி (சர்க்கரை) - 500 கிராம்

ஏலப்பொடி - 2 தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய் - ஒரு போத்தல்

செய்முறை:

பச்சரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊறவிடவும். அதன் பின்பு அரிசியை மாவாக இடிக்கவும். இடித்த மாவை 3 தரம் அரிக்கவும்.

அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் மாவை போடவும்.

மாவை அரித்த பின்பு கிடைக்கும் சிறிய குருணலை எடுத்து அதிலுள்ள அழுக்குகளை(நெல்உமி)அகற்றவும்.

அதன் பின்பு மா போட்ட பாத்திரத்தில் மாவிற்கு மேலே குருணலை போடவும்.

அப்பாத்திரத்தில் சீனி (சர்க்கரை), ஏலக்காய்த்தூள் இவையிரண்டையும் போடவும்.

அதன் பின்பு அப்பாத்திரத்தை காற்று உள்ளே போகாதவாறு நன்றாக மூடி வைக்கவும்.

அடுத்த நாள் பாத்திரத்திலுள்ள மாவை நன்றாக கைகளால் குழைக்கவும் (இந்த மாவுடன் வேறு எந்த பொருளும் சேர்க்ககூடாது. அத்துடன் வேறு எந்த ஆயுதமும் பாவிக்ககூடாது).

குழைத்த மாவை அளவான உருண்டைகளாக்கவும். பின்பு உருண்டைகளை இலேசாக அமர்த்தவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கி அதில் எண்ணெயை விட்டு சூடாக்கவும்.

கொதித்த எண்ணெயில் அமர்த்திய உருண்டைகளை போட்டு பொரித்தெடுத்துப் பரிமாறவும்.

குறிப்புகள்:

அரியதரம் இலங்கை மக்களால் மிக மிக விரும்பி உண்ணப்படும் இனிப்பு ஆகும். இலங்கை மக்களால் கொண்டாடப்படும் திருமணம் போன்ற கலாச்சார வைபவங்களில் இது மிகமிக முக்கிய இடத்தை வகிக்கிறது. அத்துடன் இந்த இனிப்பானது அரிசிமாவை அரித்து(சலித்து) செய்வதாலும் தரமாக இருந்தாலும் இதற்கு பழமையான காலத்து மக்களால் அரியதரம் எனப்பெயர் சூட்டப்பட்டது.

கவனிக்க வேண்டிய விஷயங்கள் -(1)மா போடும் போது அல்லது மாவுடன் மற்றைய பொருட்களை போடும் போது வேறு எந்த பொருளும் சேர்க்ககூடாது. அத்துடன் வேறு எந்தஆயுதமும் பாவிக்ககூடாது மாவின் மேலையே

மற்றபொருட்களை போடவும் அத்துடன் குழைக்கவும் கூடாது அடுத்த நாளே மாவை குழைக்கவும்.(2) இதை பொரித்தெடுத்து ஆறியதும் டப்பாவில் போட்டு மூடி(2- 3) கிழமைகளுக்கு வைத்து உண்ணலாம். மாற்று முறை - வெள்ளை பச்சரிசிக்கு பதிலாக தீட்டிய சிவத்த பச்சரிசியை (பொங்கள் அரிசி) பாவிக்கலாம். எச்சரிக்கை - சர்க்கரை நோயாளர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.