அரிசிமா புட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசிமா(வறுத்தது) - 3 சுண்டு

தண்ணீர் (கொதித்தது) - தேவையானளவு

உப்பு - தேவையானளவு

தேங்காய்ப்பூ, தேவையானளவு(விரும்பினால்)

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் அரிசிமா, உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும். அதன் பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக கொதிநீரை விட்டு மாவை குழைக்கவும் (அதிகளவு தண்ணீர் விடக்கூடாது).

குழைத்த மாவை கிரைண்டரில் (மிக்ஸியில்) போட்டு ஒரு சுற்று மட்டும் சுற்ற விடவும் அல்லது கையினால் ஓரளவு சிறு சிறு உருண்டைகள் வரக்கூடியதாக குழைக்கவும் (புட்டு பதத்திற்கு குழைக்கவும்).

புட்டு பானையை எடுத்து அதில் தண்ணீர் விட்டு அதன் மேல் புட்டு குழலை அல்லது ஸ்டீமரை வைத்து அதனை அடுப்பில் வைத்து அதில் உள்ள தண்ணீரை கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் கொதித்து நீராவி வரத்தொடங்கியதும் புட்டு குழலை அல்லது ஸ்டீமரை வெளியே எடுத்து அதில் கொஞ்சம் அரிசிமாவை போடவும் அதன் பின்பு கொஞ்சம் தேங்காய் பூவை போடவும். அதன் பிறகு திரும்பவும் அரிசிமாவை போடவும்.

அதன் பின்பு தேங்காய் பூவை போடவும் இப்படியே குழல் அல்லது ஸ்டீமர் நிரம்பும் வரை அரிசிமாவையும் தேங்காய் பூவையும் மாறி மாறி போடவும். குழைத்த அரிசிமா நிரம்பிய புட்டு குழலை அல்லது ஸ்டீமரை புட்டு பானையின் மேலே வைத்து ஆவியில் அவிய விடவும்.

புட்டு அவிந்து நீராவி வந்த பின்பு புட்டு குழலை அல்லது ஸ்டீமரை வெளியே எடுத்து அதிலுள்ள புட்டை வேறு ஒரு பாத்திரத்தில் போடவும்.

இப்படியே குழைத்த எல்லா மாவையும் புட்டாக அவிக்கவும்.

அதன் பின்பு ஒரு சாப்பாட்டு கோப்பையில்(பிளேட்டில்) அவித்த புட்டை வைத்து அதனுடன் கறி, சம்பல், பொரியல், வாழைப்பழம் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து அதனை பரிமாறவும்.

குறிப்புகள்:

அரிசிமா புட்டு சுவையான ஒர் சிற்றுண்டியாகும். இதனை இலங்கையை சேர்ந்த மக்கள் காலை உணவாக அல்லது இரவு உணவாக கறியுடன் அல்லது சம்பலுடன் உண்பார்கள் அத்துடன் இதில் கால்சியம், கார்போஹைட்ரேட், மினரல், அயோடின் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. கவனிக்க வேண்டிய விஷயங்கள் - அதிகளவு தண்ணீர் விடக்கூடாது. மாற்று முறை -அரிசிமாவுக்கு பதிலாக வறுத்த மைதாமா(கோதுமைமா)பாவிக்கலாம்,தேங்காய் பூவை போடாமலும் செய்யலாம். எச்சரிக்கை - சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும் அத்துடன் ஆஸ்துமா நோயாளர், இருதய நோயாளர் தேங்காய் பூ போடாமல் உண்ணலாம்.